தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சூர்யா தேவி மீது நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சர்ச்சை திருமணம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணம் ஆன நாள் முதலே வனிதா, பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தனக்கு முறையாக விவகாரத்து கொடுக்காமல் நடிகை வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துகொண்டதாக அவரது முதல் மனைவி போலீஸில் புகார் அளித்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் வனிதாவின் திருமணத்தை விமர்சிக்கத் தொடங்கினர். அவர்களுக்கு தனது பாணியில் வனிதா தகுந்த பதிலடி கொடுத்ததால், அனைவரும் மன்னிப்பு கோரினார்.

வம்பிழுத்த சூர்யா தேவி

திருமண சர்ச்சையிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த வனிதாவிற்கு, சூர்யா தேவி என்பவர் மூலம் மீண்டும் பிரச்சனை தொடங்கியது. இது மற்ற பிரச்சனைகளைப் போல் நாகரீகமாக இல்லாமல் சற்று எல்லை மீறிய பிரச்சனையாகவே இருந்தது. வனிதா, தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் ஏதேனும் ஒரு வீடியோவை வெளியிட்டால், அதற்கு பதில் வீடியோவை வெளியிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு தள்ளுகிறார் சூர்யா தேவி. மற்றவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்த வனிதாவிற்கு ஏனோ சூர்யா தேவிக்கு முறையான பதிலடி கொடுக்க முடியாமல் காவல்துறையை அணுகினார். சில தினங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையம் சென்ற வனிதா, தன்னைப்பற்றி அவதூறாக பேசும் சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்.

கண்ணீர் கதறிய வனிதா

ஆனால், சூர்யா தேவியோ வனிதாவை விடுவதாக இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்பும் தொடர்ந்து வனிதாவிற்கு எதிரான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான வனிதா இன்று மீண்டும் போரூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதில், தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாகவும், வீட்டிற்கே வந்து தாக்க போவதாக மிரட்டுவதாகவும், எனவே சூர்யா தேவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேன்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி நடிகை வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில்; என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும் பொய்யான தகவல்களை பரபரப்பி வருகிறார். என் இமேஜை கொடுக்கப் பார்க்கிறார். பணம் சம்பாதிக்க இதுபோல செய்து வருகிறார். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூர்யாதேவி – ரவீந்திரன் சேர்ந்து தான் அவதூறு பரப்பி வருகின்றனர். என்னுடைய மகன் மனதளவில் பாதிக்கப்படுகிறார். எனக்கு 40 வயது ஆகிறது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு பரப்புகிறார்கள். சூர்யா தேவி பற்றிய ஆதாரத்தை போலீசில் கொடுத்துள்ளோம். கலாச்சார சீரழிவு என்ற வார்த்தையை பயன்படுத்த சூர்யா தேவிக்கு அருகதையே இல்லை. இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

கஞ்சா வியாபாரி?

வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறுகையில்; “சூர்யா தேவி அவரது ஆட்கள் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். சூர்யாதேவி கஞ்சா விற்பனை செய்பவர். கஞ்சா விற்பனையை பாதுகாப்பாக நடத்துவதற்காகவே அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். சூர்யா தேவி கஞ்சா விற்பனைக்காக பேசும் ஆடியோக்களை போலீசில் ஒப்படைத்துள்ளோம். காவல்துறை இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எலிசபெத்துடன் சூர்யா தேவி

காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்துள்ள நிலையில், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத சூர்யா தேவி, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனை இன்று சந்தித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள அவர், வனிதா தன்மீது புகார் அளித்துள்ளதை எவ்வித அச்சமுமின்றி தெரிவிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here