புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென தனது அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் ராஜினாமா
புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சந்திர பிரியங்கா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அவர் தனது அமைச்சர் பதிவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான கடித்தத்தை முதலமைச்சர் ரங்கசாமிக்கும், துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் அனுப்பியுள்ளார்.
பணம் என்னும் பூதம்
அந்த கடித்தத்தில் சந்திர பிரியங்கா குறிப்பிட்டிருப்பதாவது; “ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக என் பணியினை மனத்திருப்தியுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்னும் பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன். மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்” எந்று அதில் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.