தென்காசி, தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கனமழை
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெளியிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே பல ஊர்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதேபோல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை வேளையில் கனமழை பெய்தது.
மிதமான மழை
தேனி மாவட்டம் பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் மழை கொட்டியது. இதனால் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சாரல் மழை திடிரென வேகமெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால், தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.