வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
“ரெட் அலர்ட்”
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளதை அடுத்து வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 13ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், டெல்டா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மின கனமழைக்கான “ஆரஞ்சு அலர்டும்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கும் மழை
இதன் காரணமாக சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில், சென்னையில் பட்டினபாக்கம், சாந்தோம், மெரினா, சேப்பாக்கம், சிந்தாரிப்பேட்டை, போரூர், ராமாபுரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், குன்றத்தூர், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்ய ஆரம்பித்த கனமழை, நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.