குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி 18 செ.மீ., மேல் பவானி 12 செ.மீ., வால்பாறை, தோவாலா தலா 11 செ.மீ., சின்னக்கல்லார் 10 செ.மீ., சின்கோனா, சோலையார் தலா 9 செ.மீ., தேனி பெரியாறு, பந்தலூர் தலா 6 செ.மீ., வால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், சிவலோகம், தேக்கடி தலா 4 செ.மீ., பாபநாசம் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதிகள், கேரளா, கர்நாடக, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here