தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

நகரும் நியாய விலைக்கடைகள்

கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டன. இந்த  நகரும் நியாய விலைக் கடை வாகனங்களை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர் என்றும் மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலத்திட்டங்கள் தொடக்கம்

இதனையடுத்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பொது விநியோக திட்டத்தின் கீழ் முன்னோட்ட அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன் அடையாளமாக, ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை அவர் வழங்கினார். பின்னர் சிசிடிவி, ஜிபிஎஸ் உடன் மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here