காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, சின்னக்கல்லார், கீழ் கோத்தகிரி எஸ்டேட் 5 செ.மீ., வால்பாறை, சோலையார் தலா 4 செ.மீ., மேல் பவானி, காட்பாடி, தோவாலா தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள வடதமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here