போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகையும், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திரையுலகினரையும், ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என சுஷாந்த்தின் தந்தை மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர். மேலும் சிபிஐ விசாரணை கோரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுஷாந்த் வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

சோதனை, கைது

இது ஒருபுறம் இருக்க, சுஷாந்த் சிங்கிற்கு ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அதுதொடர்பாக என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ரியா சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார், ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் 9ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஷோயிக் மற்றும் மிராண்டா ஆகியோர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ரியா கைது

அதன்பின், விசாரணைக்கு ஆஜராகுமாறு ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி மும்பை பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியா ஆஜரானர். அவரிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ரியா விசாரணைக்காக என்சிபி அலுவலகத்தில் ஆஜரானார். இதுகுறித்து என்சிபி அதிகாரிகள் கூறுகையில், “தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக அவர்களின் செல்லிடப்பேசி உரையாடல்கள் அடிப்படையில் மேலும் சில தகவல்கள் பெற வேண்டியிருப்பதால் ரியா உள்ளிட்ட நால்வரிடமும் ஒரே இடத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர். மூன்றாவது நாள் விசாரணைக்காக என்சிபி அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜரான ரியாவை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கஞ்சா கலந்த சிகரெட்டைப் பயன்படுத்தியாக ரியா கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here