திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகயில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 12 செ.மீ. மழையும், ஏற்காட்டில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வால்பாறையில் 9 செ.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 7 செ.மீ., ஹாரிசன் எஸ்டேட், சோலையாரில் தலா 5 செ.மீ. மழை பதிவகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கேரளா- கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here