மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. காவிரியில் தற்பொழுது ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 316 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து மொத்த நீர்மட்டம் 75 அடியாக உள்ளது.
நீர்மட்டம் உயர்வு
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 28.99 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பின் காரணமாக மேட்டூர் அணையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீர் அளவிடும் பணி துவங்கப்பட்டுள்ளது. அணையின் வலது கரையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.