தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றுடன் கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓருசில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 36 செ.மீ. மழையும், அலவாஞ்சி, கூடலூர் பஜாரில் 35 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேல் கூடலூர், பிறையார் எஸ்டேட்டில் 33 செ.மீ. மழையும், சேருமுல்லையில் 32 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேல் பவானி 26 செ.மீ., பந்தலூர், பாரவூட் எஸ்டேட்டில் தலா 25 செ.மீ., நடுவட்டம் 22 செ.மீ., நீலகிரி மாவட்டம் க்ளென்மோர்கன் 19 செ.மீ., எமரால்டு 9 செ.மீ., சின்னக்கல்லார் 36 செ.மீ., சிங்கோனா 29 செ.மீ., வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 23 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு 20 செ.மீ., தேக்கடி 16 செ.மீ., கூடலூர் 7 செ.மீ., கன்னியாகுமரி சிவலோகம், 8 செ.மீ., சூரலக்கோடு 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், வடகிழக்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா – குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here