தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மிதமான மழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணியில் தலா 7 செ.மீ. மழையும், சின்னக்கல்லார், பந்தலூரில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தோவாலா, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், வால்பாறை, சோளிங்கர், சோலையார், கோவை மாவட்டம் பிறையார் எஸ்டேட், நீலகிரி மாவட்டம் சேருமுல்லை பகுதிகலில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, மஹாராஷ்டிரா கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here