சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் கனமழை பெய்யும்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும், பந்தலூரில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தோவாலா, கரூர் மாவட்டம் பாலவிடுதி பகுதிகளில் தலா 8 செ.மீ. மழையும், சின்னக்கல்லார், புதுக்கோட்டை மாவட்டம் அதனக்கோட்டையில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னை அயனாவரம், பொன்னேரி, திருவள்ளூர், அரக்கோணம், துவக்குடி, வால்பாறை பகுதிகளில் 6 செ.மீ. மழையும், சோழவரம், பெரம்பூர், பஞ்சப்பட்டி, பெருங்கலூர், சின்கோனா பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், அந்தமான், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here