தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

சேலான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரியநாயக்கன்பாளையம், வலங்கைமான், நன்னிலம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், குடவாசல், திருவாரூர், நீடாமங்கலம், திருப்பூண்டி பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை, கொள்ளிடம், பாபநாசம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும், ராசிபுரம், கள்ளக்குறிச்சியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஓமலூர், ஜெயங்கொண்டம், சிவகங்கை, புள்ளம்பாடி, பெருந்துறை, அரூர், கிழச்செருவை, வேப்பூர், அகரம் சீகுர் பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here