இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் செயல்படுவதும், வதந்தி பரப்பி வாய்ப்பைப் பறிப்பதும் கடும் கண்டனத்திற்குறியது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளது.

சினிமா அரசியல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த்தின் மரணத்திற்கு சினிமா பின்புலம் உள்ளவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை சிலர் தட்டிப்பறித்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சினிமா பின்புலம் உள்ளவர்கள் சினிமாவை ஆட்சி செய்வதாகவும், சினிமா அரசியல் அதிகமாக செய்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் சிலரும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல மேடை நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் உதாசீனப்படுத்தபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டன.

அதிர்ச்சி தந்த ரஹ்மான்

அதில், நடிகர் சல்மான் கான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை உதாசீனப்படுத்திய வீடியோ ஒன்று பலரால் கவனிக்கப்பட்டது. இதனை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு, இந்திப் படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுவதாக ஏ.ஆர். ரஹ்மான் பேசிய விஷயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; பாலிவுட்டில் என்னைப் பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன். ‘தி பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள் என்றார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். அனைவரையுமே நான் வரவேற்கிறேன். இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

அமைச்சர் கண்டனம்

ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம் என்கிற நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் களத்திலிருந்தும் ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; “பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலக அளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவைப் பதிவு செய்து கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here