கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறில் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தங்கக் கடத்தல்

கடந்த 4 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில், ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத்துறை வட்டராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறை ஆபரேஷனல் மேலாளராக ஸ்வப்னா பணிபுரிந்து வருகிறார். தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா, தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவு

தங்கக் கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா, திடீரென தலைமறைவானார். அவரை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூணாறில் பதுங்கலா?

இந்நிலையில், ஸ்வப்னா தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் இருந்து கொண்டே திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற ஸ்வப்னா முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்வப்னாவை பிடிக்க கேரள போலீசார் தமிழகம் வர திட்டமிட்டிருந்தனர். இதனிடையே, ஸ்வப்னா மூணாறில் பதுங்கியிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தன்னை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூணாறு அருகே போதமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here