பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ‘ஹால் டிக்கெட்’ பெறுவதற்கு ஏதுவாக இன்று முதல் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொதுத் தேர்வு

வருகிற 15ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் 13ந் தேதி வரை வழங்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் 109 சிறப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்து

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் கோ. கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மாநகர போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 63 வழித்தடங்களில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு அனுமதியில்லை

இந்த சிறப்பு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்றும் ஆசிரியர்கள் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றும் ஏனைய பிற பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் கட்டாயம்

இந்த சிறப்பு பேருந்துகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் பள்ளி கல்வித்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் புறப்பட்டு, பின்னர் மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பேருந்துகளில் பயணம் செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, தனிநபர் இடைவெளியினையும் பின்பற்றிடும் பொருட்டு, பேருந்துகளில் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here