கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ந் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிறப்பு ரயில்

இந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் கடந்த 1-ந் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே நிர்வாகம், ஜூன் 12ம் தேதி முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் சேவை வேண்டாம்

இந்த ரயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டதால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த கருத்தை முன்வைத்து, ரயில் மற்றும் விமான சேவையை தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது அறிவிக்கப்பட்டது.

டிக்கெட்டுகள் ரத்து

இந்த நிலையில், அட்டவணைப்படி ஜூன் 30ம் தேதி வரையில் இயங்கும் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து ரயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது.

ரயில்கள் ரத்து

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என்றும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here