நான் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவு என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள் என சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா கூறியுள்ளார்.

இயக்குநரின் தம்பி

பிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா, “டூ மச்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் அன்பு என்ற படத்தில் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான இவர், அதன்பிறகு காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். நடிகர் பாலாவுக்கு மலையாளத்தில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாலா.

துணை கதாபாத்திரம்

அஜித்துடன் வீரம் படத்திலும், ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார் பாலா. இவர் முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு, இராண்டாவதாக எலிசபெத் என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே உடல் நலக்குறைவால் மருத்துவரை அணுகியுள்ள நடிகர் பாலா தற்போது கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நடிகர் பாலா தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

உடல்நிலை மோசம்

இந்நிலையில், பாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவு என மருத்துவர்கள் கை விரித்துவிட்டார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் பாலா பிழைப்பார் என்று சொல்ல முடியாது என என் அண்ணன் சிவா, சகோதரியிடம் மருத்துவர் கூறியிருக்கிறார். அதை கேட்டு அவர்கள் இருவரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். என்ன டாக்டர் இப்படி சொல்கிறீர்கள். இதுவே உங்களின் சகோதரராக இருந்தால் என்ன செய்வீர்கள் என டாக்டரிடம் என் சகோதரி கேட்டிருக்கிறார். அவர் என் சகோதரராக இருந்தால் நிம்மதியாக சாகவிடுவேன் என கூறியிருக்கிறார். டாக்டர் கூறியதை கேட்டு என் சகோதரியும், அண்ணாவும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். இனி நான் பிழைக்க மாட்டேன் என டாக்டர் சொன்னதை அடுத்து அறிக்கை வெளியிடக்கூட முடிவு செய்தார்கள்.

அறுவை சிகிச்சை

ஆனால் டாக்டர் கை விரித்த சில மணி நேரத்தில் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அதன்பிறகு நான் உடல்நலம் தேறி பழைய பாலாவாக உங்கள் கண் முன்பு வந்து நிற்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்கள் மட்டும் அல்லாமல் என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தவர்களும் வந்து பார்த்து சென்றது எனக்கு சந்தோஷமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here