சர்ச்சைக்கு இடையே வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தின் வசூல் இரண்டாவது வார இறுதிக்குள் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை

மேற்கு வங்காள இயக்குநரான சுதீப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படத்தின் டிரெய்லரில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்சிகள் அமைந்திருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. 3 பெண்களின் உண்மை கதைகள் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது என கூறப்படுகிறது. “தி கேரளா ஸ்டோரி” படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.

எதிர்ப்பு – ஆதரவு

இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக திரையரங்குகளில் படம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் கேரளாவிலும் கூட பல திரையரங்குகளில் படம் வெளியிடுவதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மேற்கு வங்காளத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விஷயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தார். அதேவேளையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் படத்திற்கு வரி விலக்கு அறிவித்து உள்ளனர்.

வசூல் சாதனை

இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கிடையே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. சலசலப்பை எல்லாம் படம் முறியடித்து வசூலில் முன்னேறி கொண்டிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தொடக்க நாளில் ரூ.8.03 கோடியும், அடுத்த நாள் ரூ.11.22 கோடியும் வசூலித்து இருந்தது. 3-வது நாளான ஞாயிற்றுகிழமை பாக்ஸ் ஆபீசில் ரூ.16 கோடி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. இதனால், முதல் வார இறுதியில் பட வசூல் மொத்தம் ரூ.35.25 கோடியாக உள்ளது. தி கேரளா ஸ்டோரி படம் இந்த வாரம் முழுவதும் வசூலை குவிக்கும் என பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபீசில் ரூ.8.05 கோடி என்ற அளவில் வசூல் தொடங்கிய நிலையில் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்று படத்தின் மொத்த வசூல் ரூ.93.37 கோடியாக உள்ளது. ரூ.100 கோடியை எட்டுவதற்கு இன்னும் ரூ.7 கோடியே மீதம் உள்ளதால், இரண்டாவது வார இறுதி வருவதற்குள் எளிதில் இப்படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here