தமிழகத்தில் இன்று முதல் மே 17 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதி தீவிர புயல்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; நேற்று (12.05.2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர “மோகா” புயலானது இரவு 11.30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (13.05.2023) காலை 8.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (14.05.2023) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக இன்று (மே 13) முதல் 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நாளை (மே 14) இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுதினம் (மே 15) தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேன்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.