இயக்குநர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி இயக்குநர்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலா. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை, வர்மா உள்ளிட்ட படங்கள் வந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது. தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பாலா. நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், திடீரென அவர் விலகினார்.

மனக்கசப்பு

சூர்யாவுக்கும், பாலாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால்தான் படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. சூர்யா மற்றும் விக்ரமை வைத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த பாலா, தற்போது இருவரிடத்திலும் மனக்கசப்புடன் உள்ளார் என்ற கிசுகிசுவும் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதை பாலா அறிக்கை மூலம் வெளியிட்டு இருந்தார். தற்போது சூர்யா நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகின்றது. மேலும் துணை கதாபாத்திரத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஓயாத பிரச்சனை

இந்நிலையில் கன்னியாகுமரியில் மூன்று நாட்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு, பேசப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் துணை நடிகையாக இருந்த லிண்டா, ஒருங்கிணைப்பாளரிடம் சம்பளத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒருங்கிணைப்பாளர் லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது காயமடைந்த துணை நடிகை லிண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வணங்கான் படத்தை துவங்கியதிலிருந்து பல பிரச்சினைகளும், சர்ச்சைகளும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றது. எப்படியோ எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நல்ல படியாக படம் முடிந்து ரிலீஸ் ஆனால் போதும் என்ற நிலையில் பாலாவும், ரசிகர்களும் வந்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here