திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல்

திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். முன்னதாக விழா அழைப்பிதழ் மற்றும் பேனரில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காருக்கு கருப்பு கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் கார் மீது கல்வீசியும், கட்டைகளை கொண்டும் சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படாத நிலையில், அமைச்சர் கே.என் நேரு தரப்பில் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கருப்பு கொடி காட்டியதாக 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சஸ்பெண்ட்

இந்த நிலையில், திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here