பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சாய் காயத்ரி விலகிவிட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

சுயநலவாதிகள்

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பமாக இருக்கும் இந்த தொடரில் நான்கு அண்ணன்களின் பாசமே முக்கியமான கதையாக உள்ளது. கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணன் கதாபாத்திரம் மிகவும் சுட்டித்தனமாகவும், பொறுப்பில்லாத பையனாகவும் இருக்கக்கூடியது. காதலித்து வீட்டைவிட்டு வெளியே சென்று திருமணம் செய்துகொண்டு அதன்பிறகு பல இன்னல்களை மீண்டும் வீட்டில் இணைகிறார். தற்போது கண்ணன் கதாபாத்திரம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசு வேலையும் பெறுகிறார். கதிரும் ஹோட்டல் தொடங்கி தனியாக நன்றாக சம்பாதித்து வருகிறார். கண்ணனும், கதிரும் நன்றாக சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சம்பளம் வந்தவுடன் பாதி சம்பளத்தை தனது செலவுக்காக எடுத்து வைத்துக்கொண்டு மீதி பணத்தை மட்டும் மூத்த அண்ணன் மூர்த்தியிடம் கொடுக்கிறார் கண்ணனும், ஐஸ்வர்யாவும். சுயநலமாக யோசிக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவும், மற்றவர்கள் சம்பாதிப்பதை ஏளனமாக பேசும் கண்ணனும் கடந்த சில நாட்களாக நெகட்டிவ் கதாபாத்திரங்கள் போல இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர்.

விலகிய நடிகை

மற்றவர்களை ஏளனமாக பேசும் இவர்கள் இருவரும்தான் குடும்பத்தையே பிரிக்கப் போகிறார்கள் என்று கமெண்ட்கள் குவிந்தும் வருகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் காயத்ரி இந்த தொடரை விட்டு விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தொடரில் இருந்து விலகும் காரணத்தையும் விளக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; “அதிகாரப்பூர்வமாக நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகப் போகிறேன். அந்த தொடரில் உள்ள எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. எனது முடிவை ஏற்றுக்கொண்ட விஜய் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்திற்கு 3 பேர் மாறி உள்ளதும், தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கும் 2 முறை நடிகைகள் மாற்றப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இனி அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here