லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு நடிகர் அர்ஜுன் மோகன்லாலை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

வித்யாசமான நடிப்பு

1980களில் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகர் அர்ஜுன், பல ஆக்ஷன் படங்களில் நடித்ததன் மூலம் ஆக்ஷன் கிங் என்று பெயர் பெற்றார். ஆக்ஷன் படங்கள் என்று சொன்னாலே அர்ஜுன் பெயர் நினைவுக்கு வரும் அளவிற்கு, ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ஆரம்ப காலத்தில் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அர்ஜுன், தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டி வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மீண்டும் இயக்குநர்

ஜெய்ஹிந்த் மற்றும் சுயம்வரம் படங்களை இயக்கியதன் மூலம் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் வெற்றி பெற்றார் நடிகர் அர்ஜுன். மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள நடிகர் மோகன்லால் வைத்து திரைப்படம் இயக்குவது தான் தனது கனவு என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நடிகர் மோகன்லாலை சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார் அர்ஜுன். நடிகர் மோகன்லாலை வைத்து படம் இயக்குவது தான் தனது நீண்ட நாள் விருப்பம் என தெரிவித்திருந்த அவர், அதற்கான வேலைகளிலும் இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

2-வது ஷெட்யூல்

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ஜுன், இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்துவிட்டு, இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். லியோ படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக மோகன்லாலை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது மட்டும் நடந்தால் அர்ஜுனை இயக்குநராக மீண்டும் ரசிக்கலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here