பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய ஷாருக்கானின் மனைவி மீது மோசடி புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
மோசடி புகார்
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் போலீசில் மோசடி புகார் ஒன்று அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், கௌரி கான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 409 பிரிவின் கீழ் லக்னோவில் உள்ள சுஷாந்த் குலோப் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியிருப்பை தரவில்லை
லக்னோவை சேர்ந்த கிரிட் ஜஸ்வந்த் ஷா என்ற தொழிலதிபர் துல்சியானி என்ற கட்டுமான நிறுவனத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.85.46 லட்சம் கொடுத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு குடியிருப்பை ஒப்படைத்து விடுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் கட்டுமான நிறுவனம் வழங்காததால் இழப்பீடாக 2017 ஆம் ஆண்டு ரூ. 22.70 லட்சம் வழங்கி இருக்கிறது. அடுத்து ஆறு மாதங்களுக்குள் குடியிருப்பை தராவிட்டால் வட்டியுடன் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக வாக்கு அளித்துள்ளது. பிளாட் வாங்குவதற்கான முன்பணம் கொடுத்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக கௌரி கான் இருந்து வருகிறார்.
விளக்கம் கொடுக்க வில்லை
கௌரி கான் விளம்பரப்படுத்தியதை பார்த்து தான் அந்த பிளாட்டை வாங்க முடிவு செய்தேன் என்று அந்த தொழிலதிபர் கூறியுள்ளார். இந்த புகார்கள் அடிப்படையில் துல்சியானி கட்டுமான நிறுவனம் அதன் தலைமை நிர்வாக இயக்குனர் அனில் குமார், இயக்குனர் மகேஷ் துளசி யானி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் குறித்து கௌரி கான் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.