பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு நானே நேரடியாக சென்று தண்டனை கொடுப்பேன் என்று நடிகை ரித்திகா சிங் கூறியுள்ளார்.

பல மொழிகளில் ரிலீஸ்

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

மனரீதியான பிரச்சனைகள்

நிகழ்ச்சியில் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது, “இன் கார்” படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இதுபற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இதுபோன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது. நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இதுபோன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள், அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும்,  இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே “இன் கார்”. இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம்” என்று கூறினார்.

நானே தண்டிப்பேன்

இந்த படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பேசியதாவது, “இன் கார்” படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தில் எந்த எல்லை வரை செல்லுகிறாள் என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப் படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்” என்றார். அதன்பிறகு அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு நீங்கள் என்ன தண்டனை கொடுப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த ரித்திகா, “பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு நானே நேரடியாக சென்று தண்டனை கொடுப்பேன்” என போல்ட் ரிப்ளை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here