அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைப்பதாக நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா வேதனையுடன் கூறியுள்ளார்.

முன்னணி நடிகை

தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். பின்னர் அரசியலில் தீவிரம் காட்டிய அவர், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அரசு விழாக்களில் பங்கேற்க செல்லும்போது மக்களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவது, கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரோஜா.

ஆபாசப் பதிவு

இந்த நிலையில், அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைப்பதாக ரோஜா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது; “நான் சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் வேதனை அளிக்கிறது. பிறந்தநாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர். இப்போது என் மகளின் போட்டோவை மார்பிங் செய்தும், என்னை பற்றியும் ஆபாசமான படங்களை வெளியிடுகிறார்கள். அதை பார்த்த என் மகள் மிகவும் வருத்தப்பட்டாள். இவையெல்லாம் நமக்கு தேவையா என்று என் முகத்தின் மீது நேரடியாக கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிரபலங்களுக்கு இவை எல்லாம் சாதாரணமாக நடப்பவைதான். இவற்றை கண்டு கொண்டால் முன்னேற முடியாது என்று என் குழந்தைகளுக்கு நானே புரியும்படி சொல்லி வருகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here