தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“ரெட் அலர்ட்”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் எனவும் கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக – கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

அதி கனமழை

இதன் காரணமாக, இன்று (11.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கன முதல் மிக கனமழை

நாளை (12.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 – 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

பரவலாக மழை

கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடம் (மயிலாடுதுறை) 11 செ.மீ., பரங்கிப்பேட்டை (கடலூர்) 10 செ.மீ., சிதம்பரம் (கடலூர்) 9 செ.மீ., கடலூர், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 8 செ.மீ., தரமணி (சென்னை), செம்பனார்கோயில் (மயிலாடுதுறை), அண்ணாமலை நகர் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), காரைக்கால், திருப்பூண்டி (நாகப்பட்டினம்), புதுச்சேரி, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 7 செ.மீ., சென்னை விமான நிலையம் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), நாகப்பட்டினம், திருக்குவளை (நாகப்பட்டினம்), தண்டையார்பேட்டை (சென்னை), சிதம்பரம் (கடலூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்) , நந்தனம் (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 6 செ.மீ., ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), குப்பநத்தம் (கடலூர்), ஆவடி (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), பள்ளிக்கரணை (சென்னை) தலா 5 செ.மீ., டிஜிபி அலுவலகம் (சென்னை), புவனகிரி (கடலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கே.எம்.கோயில் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருவள்ளூர், மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று (11.11.2022) மற்றும் நாளை (12.11.2022) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here