“லவ் டுடே” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்படத்தின் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தான் நட்சத்திரம் அல்ல, உங்களில் ஒருவன் எனத் தெரிவித்துள்ளார்.

“லவ் டுடே”

கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘லவ் டுடே’. பிரதீப் இயக்கி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வெற்றி அடைந்தது.

காண்பது நிஜமா?

இந்நிலையில், ரசிகர்களின் ஆதரவுக்கு இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை அன்றும் பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும், ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இதே நிலை இருக்கிறது. பெங்களூரு, கேரளா, மலேசியா போன்ற இடங்கள்.

ரசிகர்களுக்கு நன்றி

நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என் மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவே, எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி. நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்” அபரித அன்புடன் பிரதீப் ரங்கநாதன். இவ்வாறு பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here