பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

முன்பதிவு

தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனைதொடர்ந்து 15-ம் தேதி மாட்டு பொங்கல் பண்டிகையும், 16-ம் தேதி காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர், பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். ஜனவரி 10-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதிக்கு நேற்று முன்பதிவு செய்தனர். பொதுவாக பொங்கலுக்கு 2 நாட்கள் முன்பு தான் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர்.

மக்கள் ஆர்வம்

அந்த வகையில், ஜனவரி 12-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான முன்பதிவை இன்று செய்தனர். 120 நாட்களுக்கு முன்பு ரயிலில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்காமல் குடும்பத்துடன் பாதுகாப்பாக பயணம் செய்ய இன்றே முன்பதிவு செய்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவுக்கான நேரடி புக்கிங் கவுண்டர் திறக்கப்பட்டது. ஆனால் கவுண்டர்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அனைவரும் வீடுகளில் இருந்தே ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்தனர். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டவுடன் அனைவரும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அம்பத்தூர், அடையார், பெரம்பூர், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பதிவு கவுண்டர்களில் நின்ற பயணிகள் சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தது.

இடமில்லை

முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் முக்கிய ரயில்களுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தன. முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் எல்லா இடங்களும் நிரம்பியது. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின. முதல் மற்றும் 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி இடங்கள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. கன்னியாகுமரி, நெல்லை, திருச்செந்தூர் முத்துநகர், மதுரை பாண்டியன், திருச்சி மலைக்கோட்டை, பொதிகை, அனந்தபுரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் இடங்கள் நிரம்பின. குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் சிறப்பு ரயிலில் படுக்கை வசதி காலியாக உள்ளது. கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி, ஏ.சி. படுக்கை வசதி மட்டும் உள்ளன. இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here