கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் வரும் ‘பத்தல பத்தல’ பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘விக்ரம்’

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்பாடல், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

சர்ச்சை வரிகள்

‘பத்தல பத்தல’ பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” எனும் வரிகள் ஆளும் அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; சகலகலா வல்லவன் + மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் லிரிக்ல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு. இவ்வாறு கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். கமலின் ‘பத்தல பத்தல’ பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here