மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

பிரபலத்தின் பேரன்

பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப்பேரன் சாய்ராம் குடும்பத்துடன் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார். வறுமையில் வாடி வந்த அவர், தனக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கடந்த வாரம் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு குறைந்த வாடகையில் குடியிருப்பையும், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து சாய்ராம் குடும்பத்தினரை நேரில் அழைத்த ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவியும், குடியிருப்புக்கான சாவியையும் வழங்கினார்.

முதல்வர் நிதியுதவி

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக முதல்வர் ஸ்டாலின், பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வாடிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பிற்கான ஆணையினையும், 5 லட்சம் ரூபாய் நிதியுதவியினையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here