கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவை விண்வெளி பூங்காவில் பணி நியமனம் செய்தது முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தெரியும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்தத் தூதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலைக் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டதையடுத்து, தங்கக் கடத்தலில் தொடர்புடையை ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கைதான ஸ்வப்னா, கேரள அரசியல்வாதிகளுடனும், மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாக பழகியது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

முதலமைச்சருக்கு தெரியும்!

தங்க கடத்தலில் நடந்த சட்ட விரோத கருப்புபண பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஸ்வப்னா சுரேஷை விண்வெளி பூங்காவில் பணி நியமனம் செய்தது முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தெரியும் என்றும் அவரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால்தான், ஸ்வப்னா சுரேஷ் பணி நியமனம் செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. 23 பக்கங்களை கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில், ஸ்வப்னாவின் பண பரிமாற்றங்களில் சிவசங்கருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவருக்கு எதிராக விரிவான விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை பரிந்துரைத்துள்ளது. மேலும் கருப்பு பண பரிமாற்றத்தில் ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், இந்த வழக்கில் சிக்கியிருப்பவர்கள் ஜாமீன் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here