‘இரண்டாம் குத்து’ படத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜாவுக்கு அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த விதத்தில் சரி?

‘இரண்டாம் குத்து’ திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரபல இயக்குநரும், தமிழ் திரைப்பட நடப்பு தயரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப் பட்டிருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப் பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப் பட்டிருக்கிறது. உலகம் எங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரண மல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக் காத்த சினிமாவை, இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன். சினிமா வியாபாரமும் தான். ஆனால், வாழைப்பழத்தை பயன்படுத்தி கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அந்த வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?  சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது?

கடும் கண்டனம் 

நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது. இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும், சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார்.

இப்ப கூசிருச்சோ!

பாராதிராஜாவின் இந்த அறிக்கைக்கு ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து, கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 1981ம் ஆண்டு வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பார்த்து கூசாத கண்ணு, இப்ப கூசிருச்சோ என அவர் கூறியுள்ளார். மேலும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் போஸ்டர் ஒன்றையும் சந்தோஷ் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here