பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது அக்டோபர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் இருந்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மத்திய அரசு அறிவுறுத்தல்

இதனிடையே, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்க அறிவுறுத்தி உள்ள மத்திய அரசு அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.  பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களே இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

அமைச்சர் ஆலோசனை

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்றார். பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்றும் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here