கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனிடையே, விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டது. அதில் குரிப்பிட்டுள்ளதாவது; விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மியட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here