தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது செப்டம்பர் 3 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் இருந்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சாத்தியமில்லை

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here