மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர் ஒருவர் சுஷாந்தின் நினைவாக அவரது ஆளுயர மெழுகு சிலையை உருவாக்கி அசத்தியுள்ளார்.

சோகத்தில் ஆழ்த்திய மரணம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி, தனது நடிப்புத் திறனால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஜூன் மாதம் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் மரணத்தையடுத்து பாலிவுட்டில் நெப்போடிசம், குரூப்பிசம், போதைப் பொருள் என்று அனைத்து சர்ச்சைகளும் எழுந்து, தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சுஷாந்த் மரணத்திற்கு அவரின் காதலியும், நடிகையுமான ரியா தான் காரணமென பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், போதைப் பொருள் கும்பலுக்கும் நடிகை ரியாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமாவையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் சினிமா பிரபலங்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

மெழுகு சிலை

இதனிடையே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகர் சுகந்தோ ராய் என்பவர், தனது அருங்காட்சியகத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் போலவே அழகான மெழுகு சிலையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆளுயர இருக்கும் அந்த சிலையை பார்ப்பதற்கு, உண்மையிலேயே சுஷாந்த் சிங் நிற்பது போலவே இருக்கிறது. சுஷாந்தின் சிரிப்பும், ஸ்டைலையும் மெழுகு சிலையில் அப்படியே தத்ரூபமாக கொண்டு வந்துள்ளார் அந்த ரசிகர். இச்சிலையை பார்த்த பலர், சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிர்ப் பெற்று வந்தது போல் இருப்பதாக கூறுவதுடன், சிலையை உருவாக்கிய ரசிகருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய சிலையை வடிவமைத்த ரசிகர் சுகந்தோ ராய், சுஷாந்த் சிங் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது தன்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது என்றும் அவர் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததால், இந்த மெழுகு சிலையை உருவாக்கியதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here