பிரபல வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

வில்லன் நடிகர்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிர்வேல் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி அவர்,‌ பிறகு நடிப்பு ஆசையால் சினிமாவுக்கு வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த ‘பிரம்மபுத்ருடு’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமான ஜெயபிரகாஷ் ரெட்டி, பாலகிருஷ்ணாவின் ‘சமரசிம்மா ரெட்டி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவே நடித்தார். சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார்.

தமிழிலும் நடிப்பு

தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அஜித்தின் ஆஞ்சநேயா படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமான ஜெயபிரகாஷ், சூர்யாவின் ஆறு, சின்னா, விஜயகாந்தின் தர்மபுரி உள்பட படங்களில் நடித்துள்ளார். தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. கடைசியாக தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘சரிலேரு நீக்கெவ்வரு’ என்ற படத்தில் வில்லனாக ஜெயபிரகாஷ் ரெட்டி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது.

மரணம்

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரான கர்னூலில் மகன், மகளுடன் வசித்து வந்த ஜெயபிரகாஷுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here