திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கனமழை

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தருமபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தோவாலா 18 செ.மீ., ஆலங்குடி 12 செ.மீ., பேச்சிப்பாறை 9 செ.மீ., குழித்துறை, சிவலோகம், கிருஷ்ணராயபுரம் தலா 8 செ.மீ., கரூர், காங்கேயம், சோலையார், கண்ணியாகுமரி புத்தன் அணை, சித்தார், பெருஞ்சாணி தலா 7 செ.மீ., வால்பாறை, சூரலாக்கோடு தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here