பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

விசாரணை தீவிரம்

பிரபல பாலிவுட் நடிகரான சுஷந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு காதலி ரியா தான் காரணம் என்றும் அவரை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், சுஷாந்தின் பணத்தைப் அபகரித்ததுடன் தற்கொலை செய்யத் தூண்டினார் என்றும் சுஷாந்தின் தந்தை ரியா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற பாட்னா போலீசார், ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் சுஷாந்தின் பழைய மேனேஜர் ஸ்ருதி மோடி, சாமியூல் மிராண்டா போன்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் ரியா சக்ரபோர்த்தி அளித்த பேட்டியில், தன் பக்கம் இருக்கும் நியாயங்களையும், தனது காதல் பணத்திற்காக ஏற்பட்டது அல்ல என்றும் விளக்கமளித்தார். சுஷாந்த்தை உண்மையாக நேசித்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார். ரியாவின் இந்த பேட்டிக்கு பிறகு அவருக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதிரடி ரெய்டு

இந்த நிலையில், சுஷாந்திற்கு ரியா போதை மருந்து கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று காலை அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பெண் அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட குழுவினரும், மும்பை போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனையிட்ட அதிகாரிகள், ரியாவின் லேப்டாப், செல்போன், கார் உள்ளிட்டவைகளிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரியா வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட அதேநேரத்தில், சுஷாந்த்தின் முன்னாள் மேனேஜர் சாமியூல் மிராண்டா வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தி , சாமியூல் மிராண்டா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தவும் போளீசார் திட்டமிட்டுள்ளனர். சுஷாந்த் மரண வழக்கில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கைசான் இப்ராஹிம், அப்துல் பசீத் பரீஹர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி?

மன உளைச்சலுக்காக எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள் அனைத்தையும் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில மாதங்களாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது மருத்துவர் தெரிவித்திருந்தது இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சியாகவும், ஆதாரமாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. பல கோணங்களிலும், பல பேரிடமும் விசாரணை தினம் தினம் நடந்துகொண்டிருக்கும் வேலையில், அன்றாடம் ஒரு இதுதொடர்பான செய்திகளும், சர்ச்சைகளும் வெளிவருவது சினிமாத்துறையினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here