மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் முக்கிய குற்றவாளியாக நினைக்கும் ரியா சக்ரபோர்த்திக்கு ஒவ்வொரு நடிகையாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தொடரும் சர்ச்சை

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் அவரது மறைவுக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சுஷாந்தின் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும், போதை மாத்திரைகளை கொடுத்து அவரை தற்கொலை செய்ய தூண்டியதாகவும் பல சர்ச்சையான குற்றச்சாட்டுகளை ரியா மீது வைத்து வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் ரியா சக்ரபோர்த்தி அளித்த பேட்டியில், தன் பக்கம் இருக்கும் நியாயங்களையும், தனது காதல் பணத்திற்காக ஏற்பட்டது அல்ல என்றும் விளக்கமளித்தார். சுஷாந்த்தை உண்மையாக நேசித்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார். ரியாவின் இந்த பேட்டிக்கு பிறகு அவருக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர்.

டாப்ஸி முதல் வித்யா வரை

முதலில் நடிகை லட்சுமி மஞ்சு ரியாவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் பதிவை போட்டார். அதைப்பார்த்த டாப்ஸியும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது நடிகை வித்யா பாலனும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “ரியாவை மீடியா வில்லியாக மாற்றுவதை பார்த்து நெஞ்சமே வெடிக்கிறது. வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக சுஷாந்தின் மரண வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பார்கள். அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னதாக நீங்களே எந்த ஒரு தீர்பையும் எழுதாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் வழக்கில் இதுவரை எந்த ஒரு நடிகையும் வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வந்த நிலையில், போதை மாத்திரைகள், போதை பழக்கம் என ஒரு பேச்சு கிளம்பியவுடன் ஒவ்வொரு நடிகையாக ஆதரவு தெரிவித்து பேசத் தொடங்கியது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பகிரங்க குற்றச்சாட்டு

கோலிவுட்டில் அதிகளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாகவும், அது சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்கிறது என்றும் ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டார் கங்கனா ரனாவத். அதன்பிறகு அனைத்து மொழிகளிலும் போதை பழக்கம் இருக்கிறது என்ற பிரச்சனை எழுந்தது. சுஷாந்த் மரணமடைந்த நாள் முதல் நெப்போடிசம் எனப் பேசிக் கொண்டிருந்த கங்கனா ரனாவத், சில நாட்களாக போதை பழக்கத்தை பற்றி பேசி வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்கி கௌஸிக், அயன் முகர்ஜி உள்ளிட்டோர் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறினார். கங்கனாவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டிற்கு, ரன்வீர், ரன்பீர் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கங்கனாவிற்கு எதிராக பல கருத்துக்களையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகர்களின் பெயர்களை குறிப்பிடாமல், இவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுவதற்கான காரணம் என்ன? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here