கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

‘கைலாசா’

இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பாக பேச தொடங்கியுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பியுள்ள அவர், தனது ருத்ர கன்னிகளுடன் சேர்ந்து தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கிறார். அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வந்தாலும், அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், கும்பலாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை அவரது ருத்ர கன்னிகளும் வெளியிட்டு வருகின்றனர். பெங்களூரு போலீசார் அவரை தேடி வரும் நிலையில், சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நித்தியானந்தா, தனது கைலாசா நாட்டிற்கு அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழை அறிவித்துள்ளார். மேலும் கைலாசா நாட்டுக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) நித்தியானந்தா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்ட நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கைலாசா எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கவில்லை.

தொடரும் கோரிக்கை

நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்தே, கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும், துணிக்கடை வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர். மதுரையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கைலாசாவில் ஹோட்டல் அமைக்க நித்தியிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஹோட்டல் உரிமையாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதைப்பற்றியும் கவலைப்படாத நித்தி, தனக்கு வரும் கோரிக்கைகளுக்கெல்லாம் ரியாக்ட் செய்து வருகிறார். கைலாசாவில் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பின்னர் கோரிக்கை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

கைலாசாவில் ஜல்லிக்கட்டு?

இந்த நிலையில், தற்போது புதிதாக ‘கைலாசா’ நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கேட்டு ’வீர மரபு வீர விளையாட்டுக் கழகம்’ எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு நித்தியின் பதில் என்ன என்பதை அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள், எப்போதும் போல் ருத்ர கன்னிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவையே நித்தி அறிவிப்பார் என நம்புகின்றனர். கைலாசா நாட்டுக்கான கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், நித்தியின் டிஆர்பி மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here