மருத்துவமனையிலிருந்து தான் வீடு திரும்பியதற்கு வனிதா தான் காரணம் என்றும் அம்மா ஸ்தானத்திலிருந்து அவர் தன்னைப் பார்த்துக் கொண்டார் என்றும் பீட்டர் பால் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

3வது திருமணம்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்தன. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது எனத் தடாலடியாக பதில் அளித்தார் வனிதா. யூடியூப் நேரலையின் போது லட்சுமி ராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவியது. வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனைப் பார்த்துக் கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். 

உருகிய பீட்டர் பால்

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி இரவு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உடல்நலம் பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக பீட்டர் பால் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; ‘இரண்டு நாளுக்கு முன்பு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால், ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதற்கு காரணம் வனிதா தான். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அம்மா ஸ்தானத்திலிருந்து பார்த்துக்கொண்டார். அப்போது தான் நினைத்துப் பார்த்தேன், வாழ்க்கையில் எவ்வளவு இழந்திருக்கிறோமென்று. எனக்கு உண்மையான பாசங்கள் கிடைக்கும்போது கடவுளுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். வனிதா இல்லையென்றால் நான் இல்லை. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இவ்வாறு பீட்டர் பால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here