சினிமாவில் போதைப் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், ரத்தப் பரிசோதனை செய்தால் பல நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் பிரபல நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பழக்கம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதிலிருந்து பல சர்ச்சைகள் பாலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. இதுதொடர்பாக நடிகையும், சுஷாந்தின் காதலியுமான ரியாவை முக்கிய குற்றவாளியாக கருதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ரியா போதைப் பொருள் கொடுத்ததாகவும், போதைப் பொருள் கும்பலுடன் ரியாவிற்கு பழக்கம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனால் ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பகிரங்க குற்றச்சாட்டு

இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலர் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும், போதைப் பொருளான கொக்கைன் அனைத்து வீடுகளில் நடக்கும் மது விருந்துகளில் தாராளமாக கிடைக்கும் என்றும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார். விலை உயர்ந்த பொருளாகவே இருந்தாலும், முதன் முதலாக பார்ட்டிக்கு வருபவர்களுக்கு அது இலவசமாகவே கொடுப்பார்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா பதிவிட்டுள்ளார். மேலும் MDMA படிகங்கள் போன்ற செயற்கை மருந்துகள் தண்ணீரில் கலக்கப்பட்டு தெரியாமல் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தான் மைனராக இருந்த பொழுது, தனது வழிகாட்டியே குளிர்பானங்களில் போதைப்பொருள் கலந்து கொடுத்து விடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் பாலிவுட்டை முழுவதும் ஆராய்ந்தால் பல முன்னணி நடிகர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ரத்தப் பரிசோதனை செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பிரதமர் மோடி தூய்மை இந்தியாவின் சட்டத்தின்கீழ் பாலிவுட் என்ற சாக்கடையை சீக்கிரம் சுத்தம் செய்வார் என்று நம்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனாவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டால், பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here