வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு 7 செ.மீ., கடலூர் மாவட்டம் வானமாதேவி 5 செ.மீ., சோழவந்தான், வாடிப்பட்டி, ஆண்டிபட்டி, திருக்கழுக்குன்றம், பஞ்சப்பட்டி, திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை பகுதிகளில் தலா 4 செ.மீ., வந்தவாசி, கமுதி, ஸ்ரீபெரும்புதூர், குறிஞ்சிப்பாடியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here