சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTT தளத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சூரரைப் போற்று’

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஷாக்கி ஷாரூப், சம்பத், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.15 கோடி மதிப்பில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அதற்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் வெளியாகும் என நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சூர்யா விளக்கம்

இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட உள்ளதாக அதிபாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சுதா கொங்குரா இயக்கத்தில் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்ற நம்புகிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால், காலம் தற்போது அதனை அனுமதிக்கவில்லை. எனவே என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ‘அமேசான் பிரைம் வீடியோ’ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அந்த வகையில் ‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன். பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு கிளம்புமா?

ஏற்கனவே சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்யப்பட்டதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யா குடும்பத்தினர் சார்ந்த எந்த ஒரு திரைப்படத்தையும் திரையிட மாட்டோம் எனக் கூறியிருந்தனர். இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் நடிகர் சூர்யா மீண்டும் OTTயில் படத்தை ரிலீஸ் செய்வது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் இந்த முடிவிற்கு தியேட்டர் உரிமையாளர்களின் பதில் என்ன? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here