கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீவிர சிகிச்சை

லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வெளிநாட்டு மருத்துவர்களுடன் ஆலோசனை

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து  மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் கொரோனா பாதித்து எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here