கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீவிர சிகிச்சை

லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து 6வது மாடியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

கவலைக்கிடம்

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசத்தை சீராக வைத்துக்கொள்ள தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியைக் கேட்ட திரையுலகினர் அதிர்ச்சி ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here